பொன்னையா கந்தசாமிப்பிள்ளை
வி.ரி.கதிர்காமநாதன். | ஊடகவியலாளர்.


சங்கீதபூசணம் இசைமணி சங்கீத ஆசிரியர் நடிகர் வயலின் மிருதங்கம் ஆகியவற்றிலும் பட்டம்பெற்றவர்.சமய
சமூகசெயற்பாட்டாளர்.
இயற்கை எழில் கொஞ்சும் ஈழமணித்திருநாட்டின் வடபால் அமைந்தது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் மேற்கே உள்ளது காரைநகர்.கல்வி மான்களும் கனவான்களும் நிறைந்ததும் செல்வம் சேர்க்கும் வாணிபத் தொழில் செய்கின்ற
செல்வந்தர்களையும் கடற்கரையையும் தன்னகத்தே கொண்டது காரைநகர்.இந்த நகருக்கு மேலும் மெருகூட்டுவது சிவபெருமான் உறையும் ஈழத்துச் சிதம்பரம் ஆகும். இந்நகரின் தோப்புக்காட்டில் இசைமணி பொன்.கந்தசாமிப்பிள்ளை
பிறந்து வாழ்ந்து தனது காந்தக்குரலினால் கலைஞர்களையும் மக்களையும் தன் வசப்படுத்தியவர்.
கர்நாடக இசைமீது கொண்ட பற்றினால் இந்தியா சென்று தமிழ்நாட்டிலுள்ள அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் கர்நாடக சங்கீதத்தை முறைப்படி பயின்றார். இசைமணி பயின்ற அதேகால கட்டத்தில் பிரபல சங்கீதவித்துவான் இசைமணி சீர்காழி கோவிந்தராசன் அவர்களும் பயின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பாராட்டுக்களுடன் பரீட்சைகளில் திறமையாக சித்தியடைந்து சங்கீத பூசணம் பட்டத்தைப் பெற்றார்.
சங்கீத பூசணம் இலங்கை திரும்பியதும் அரசாங்க பாடசாலைகளில் சங்கீதம் கற்பிப்பதற்கு சங்கீத ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பாடசாலைகளில் பணிபுரிந்தார். கானக்குரலோன் குறிப்பாக அனலைதீவு அரசினர் பாடசாலையில் சங்கீத ஆசிரியராக கடமையாற்றி மாணவர்களினதும் பெற்றோர்களினதும் நன்மதிப்பைப் பெற்றார். இந்தப் பாடசாலை மாணவர்களுக்கு பக்தநந்தனார் இசை நாடகத்தை நெறியாள்கை செய்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார். இசைமணியின் தன்நலமற்ற சங்கீத ஆசிரியர் சேவையை பாராட்டி ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் கா.பொ.இரத்தினம் தலைமையில் பாராட்டு விழா நடாத்தப்பட்டது.இந்த பாராட்டு விழாவில் இசைமணிக்கு பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நடிகப்பெருந்தகை ஆசிரியர் கு.ப.செல்லையா பாலசிங்கம் ஆசிரியர் என அன்பாக அழைக்கப்பட்டவரின் நெறி யாள்கையில் தோப்புக்காடு ஸ்ரீசுப்பிரமணிய ஆலய வருடாந்த உற்சவங்களில் கண்ணப்ப நாயனார் ஸ்ரீவள்ளி பக்தநந்தனார் ஆகிய இசை நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் கணீர்குரலோன் கந்தசாமிப்பிள்ளை நடித்து
கலைஞர்களினதும் பொதுமக்களினதும் பாராட்டுக்களைப் பெற்றார். இசை கேட்டால் புவி அசைந்தாடும் அந்த இசையை தனது
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து பக்தநந்தனார் இசை நாடகத்தில் நந்தனாக பாத்திரமேற்று கானமழை பொழிந்தும்
தனது ஒப்பற்ற நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியும் சங்கீத வித்துவான்களினதும் நடிகர்களினதும் கலைஞர்களினதும்
பொதுமக்களினதும் பெரும்பாராட்டைப் பெற்றார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கர்நாடக சங்கீத நிகழ்ச்சியில் பல தடவைகள் இசைமணியின் இசைக் கச்சேரிகள் ஒலி பரப்பு செய்யப்பட்டது.கணீர் குரலோலின் இசைக் கச்சேரிகள் இலங்கையிலுள்ள எண்ணற்ற சங்கீத வித்துவான்களின் பாராட்டைப் பெற்றது.
ஸ்ரீசுப்பிரமணிய ஆலய வருடாந்த அலங்கார விஞ்ஞாபனத்தின் போது சங்கீத பூசணம் வே.தம்பிராசா அவர்களும் சங்கீத பூசணம் பொன்.கந்தசாமிப்பிள்ளை அவர்களும் இணைந்து நடாத்திய இசைக்கச்சேரி இவ்வூர் மக்களினால் இன்றும் இவர்கள் இருவரையும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. ஸ்ரீவாலை சரஸ்வதி அம்பிகை தேவஸ்தான ஆதினகர்த்தா வைத்தியகலாநிதி சரஸகலாமணி இசைக்குயில் கந்தசாமிப்பிள்ளையின் சமய சமூக செயற்பாடுகளைப் பாராட்டி ஆலய அலங்கார உற்சவத்தின்போது பொன்னாடை போர்த்திக் கெளரவித்துள்ளார். தன்னுடைய இசையின் மேன்மையால் பிறந்த ஊருக்கும் தமிழ் இசைத்துறைக்கும் பெரும்பங்காற்றிய இசைமணி பொன். கந்தசாமிப்பிள்ளையின் இசையின் புகழ்என்றும் மடியாது
வி.ரி.கதிர்காமநாதன்.
ஊடகவியலாளர்.
